Sunday, November 28, 2010

Tamil Kavithaigal

அவள் நிலமானாள்; அவன் மழையானான்!

கலைஞர். மு. கருணாநிதி
*"யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே"
(குறுந்தொகை:பாடல்:40 பாடியவர்:செம்புலப் பெயனீரார்)
பொருள் விளக்கம்:
யாய்=தாய். ஞாய்=தாய். எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்.
செம்புலம்=செம்மண் நிலம். பெயல்நீர்=மழை
"நட்சத்திரங்கள் முகம்பார்த்து மினுக்கிக் கொள்
நாளெல்லாம் தேடித் தொங்கவிட்ட நிலவென்னும் கண்ணாடியில்,
நம்மிருவர் முகம் பார்க்க முடியாதெனினும்; கண்ணே!
நான் உன் முகத்தை நிலவாகவே பார்க்கின்றேன்!
மெய்யாகவே நிலவைப்போல் இருக்கவேண்டுமென்றுதான் - நீ
மைகொண்டு கண்ணெழுதி, கன்னத்தில் புள்ளியொன்றும் கருநிறத்தில் வைத்துக் கொண்டாய்!
தேங்காய்க் கீற்று போன்ற பிறை காட்டு எனக் கேட்டால்
பாங்காய் உன் முகத்தை என் முகத்தில் பதித்துப் பைங்கிளியே!
நேர்வகுடுக்குக் கீழுள்ள உன் நெற்றியினைக் காட்டிடுவாய்!
நேரிழையே! நீ எனக்கு விளக்க வேண்டும்;
நிலவைக் கறுப்பாக்கும் "அமாவாசை" ஒன்று வருமே!
நீ அதற்கு விதிவிலக்கா? என நான் கேட்டபோது
என் மடிமீது முகமுழுதும் புதைத்துக்கொண்டு,
உன் கருங்கூந்தல் மட்டுமே நான் காணப் படுத்துக் கொண்டாய்!
அதனை நான் அமாவாசையென எண்ணிக்கொள்ள வேண்டுமென;
அழகோவியமே! நீ உன் விரல் கொண்டு சுட்டிக்காட்ட,
கார்குழலே நான் கோதிக்கொண்டே
கண்மணியே உன் உச்சிமீது முத்தமீந்தேன்!
"அன்றென்னை அமளியிற் கிடத்தி
அன்றிலடி நாமிருவர் அரைநொடியும்
பிரிவதில்லை! ஆணையடி அன்பே என்று
விரிவுரைகள் ஆற்றினீரே - என்ன பயன்?
விடிந்தால் ஒரு திங்கள் முடிந்துவிடும் - இவள்
மடிந்தால் மடியட்டுமென்றுதானே கவலையற்று
மறுநாளே வருவதாய்ச் சொன்ன சொல்லை மறந்து போனீர்!
மறப்பது ஆடவர்க்கு இயற்கையெனக் கூறிவிடும்! நானும்; உயிர்
துறப்பதும் மகளிர்க்கு எளிதேயென்று காட்டுகின்றேன்."
இவ்விதம்
சொற்களுக்குச் சோக இசை சேர்த்து - அந்தச்
சொர்ணத்தின் வார்ப்படம் சுளையிதழ்கள் மூடுமுன்பே,
ஓடிவந்து கட்டிக் கொண்டான்! "நான்
தேடிநின்ற தெள்ளமுதே!" என அவளும் ஒட்டிக் கொண்டாள்!
வானூர்ந்த நிலவழகி; முகில் கொண்டு முகம் மறைத்தாள் வெட்கத்தாலே!
மானொன்று நாணமுற்று புதர் மறைவில் ஒதுங்கிற்றாங்கே!
கிள்ளைகளும், புறாக்களும் இணை இணையாய்க்
கிளைகளில் இருந்தெழுந்து "சிறிதேனும் இந்தப்
பிள்ளைகட்கு வெட்கமிலையோ! இத்தனைபேர் நம் மத்தியிலே
வெள்ளை மலர்ப் படுக்கையிலே காம விளையாட்டா? சிச்சி" எனக்கூறிப் பறந்தனவே!
ஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - இன்பக்
கூடல் முடித்து எழுந்தபோது - "இனியொருமுறை
"வாடல்" என்பது வாழ்க்கையில் வாராதே" என்று
ஆடல் தீர்ந்து தோகை மூடிய மயில் கேட்டாள்!
அவன், அவளைப் பார்த்து:
*"உயிரே! ஒன்று கேள்! உன்னையும் என்னையும்
உலகில் பிரிக்கின்ற சக்தி எதுவுமில்லை!
உனைப்பெற்ற தாய் யார் என்றோ
எனையீன்ற தா யார் என்றோ
உன் தந்தைக்கும் என் தந்தைக்கும்
உறவுமுறை என்னவென்றோ
இருவர் நாம் எவ்வழியில் வந்தோர் என்றோ
அறிந்திட விரும்பாமலே அறிமுகமானோம்!
எங்கிருந்தோ வந்தாள் என உன்னை நானும்,
எங்கிருந்தோ வந்தான் என என்னை நீயும்
ஏற்றுக்கொண்டோம்! இதயத்தில்;
ஏற்றிக்கொண்டோம்! இனியவளே!
செம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த
நிலத்தொடு கலந்த நீரில்
சிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ!
அஃதேபோல் நமது
நெஞ்சங்கள் இரண்டும் இணைந்துவிட்டன!
எனவே பிரிவு எனும் நினைப்பை
இக்கணமே அகற்றிவிடு!"
இந்தக் குறுந்தொகைப் பாடலை
இளங்குமரன் எளிமையாக்கிச் சொன்னவுடன்
மங்கைநல்லாள், மீண்டும் நிலமானாள் - அவன்
மழையானான்!
( நன்றி: சங்கத் தமிழ் )

No comments:

Post a Comment